புவனகீதனின் கவனக்குவிப்பும் திடசங்கற்பமும் உடனடியாகவே புலப்படக்கூடியவையாக உள்ளன. தனது மோட்டார் மெகானிக் வியாபாரத்தின் வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கினை விளக்கிய புவனகீதன் விரைவான தொனியில் பேசுகின்றார். பாடசாலை நாட்களில் தனது தந்தையின் நண்பரிடம் இருந்து தொழில் கற்ற புவனகீதன் தொழிலை முன்னெடுப்பதற்காகப் பாடசாலையை விட்டு விலகத் தீர்மானித்தார். “எனக்குத் தீவிர ஆர்வம் உள்ள ஏதாவது ஒன்றினைச் செய்வது சிறந்தது என நான் தீர்மானித்தேன்” என அவர் கூறினார். பாடசாலையின் ஒழுக்க வரம்புகளுக்குள் அடங்காத குழப்படிகார மாணவனாகத் தான் இருந்ததையும் சிரித்துக்கொண்டே புவனகீதன் குறிப்பிட்டார்.
![](https://inspiredproject.lk/wp-content/uploads/2021/12/K59WlJek.jpg)
தான் தெரிவுசெய்த துறையில் தனக்கு ஆற்றல் இருப்பதை அவர் விரைவில் உணர்ந்துகொண்டார். சர்வோதய வழங்கிய மூன்று கட்டத் தொழில் பயிற்சி மூலம் துரிதமாகவே தொழிலில் முன்னேற்றம் கண்டார் புவனகீதன். கல்வியைப் பெறுவதற்கான ஆர்வம் இவருக்கு இருக்கின்றது. ஆனால் அதற்குக் கொழும்புக்குச் செல்லவேண்டியது ஒரு தடையாக முன்நின்றது. ஆனால் ஒரு நாள் தேவையான வசதிகள் எல்லாம் திருகோணமலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் புவனகீதன் இருக்கின்றார்.
![](https://inspiredproject.lk/wp-content/uploads/2021/12/1NcpxZ-s.jpg)
புவனகீதனிடம் ஏற்கனவே இருந்த தொழில்முனைவு ஆர்வம் இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டம் மூலமாக ஒரு கட்டமைப்பினையும் கவனக் குவிப்பினையும் பெற்றிருக்கின்றது. இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்தில் இருந்து புவனகீதன் கற்றுக்கொண்ட பிரதான விடயம் முகாமைத்துவம் செய்தல் மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய புரிதலாகும். “உரிய முகாமைத்துவம் இன்றி எந்த வியாபாரமும் பயனற்றதாகிவிடும்” என அவர் கூறுகின்றார். இவருக்குக் கிடைத்த மூன்றாம் தரப்பு முதலீட்டு உதவி மூலம் தனக்கு மிகவும் தேவையான உபகரணங்களை இவர் வாங்கினார். வருமானத்தினையும் வினைத்திறனையும் ஊக்குவிக்கும் வழியாக என்ஜின் ஒயில் மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் உதிரிப் பாகங்கள் போன்றவற்றினை களஞ்சியப்படுத்த எண்ணியுள்ளார்.
நிகழ்ச்சித்திட்டம் ஏனைய நன்மைகளையும் கொண்டுவந்துள்ளது. பங்குபற்றுனர்கள் பலரும் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். வெவ்வேறு தேவைகளையுடைய மக்கள் இணைக்கப்பட்டு அவர்கள் புவனகீதனுடன் முறைசாரா வலையமைப்புக்களையும் உருவாக்கியுள்ளனர். உதாரணமாக, அண்மையில் கோதுமை மா இருப்பினை மிகையாக வைத்திருந்த ஒருவருக்குக் கொள்வனவாளர் ஒருவரை புவனகீதன் ஏற்பாடு செய்திருக்கின்றார். கிழக்குக் கரையோரப் பிரதேசத்தின் பல்லின மற்றும் கலாசாரக் குழுமங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் முறைசாராச் சமுதாயம் இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்தின் விழுமியங்களை அடியொட்டி ஒன்றிணைவதற்கான போஷிப்பினை இந்த வலையமைப்புக்கள் உருவாக்கியுள்ளன.